என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

சவக்கிடங்கு - சிறுகதை

தேசிய இலக்கிய விழா 2012 


மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது..  

(யாவும் கற்பனையே...)


இரவெல்லாம் முழித்துக் கொண்டிருந்து அழுது விட்டு பின் தூங்கியதில் விடிந்து பகல் ஆனதும் தெரியாமல் உறங்கிக்கொண்டு இருந்தாள் சுபா. அவளது மூத்த மகள் தீபா முற்றத்தில் இருந்து தனது நிழலையே முறைத்து பாத்தபடி இருந்தாள்.

அவள் கையில் ஒரு படம் மட்டும் இருந்தது. வயது பத்தான அந்த பாலகி முதன் முதலாக தனது ஐந்தாவது பிறந்தநாளுக்கு எடுத்த குடும்ப படம். அந்த புகைப் படம் மட்டும் இபோது அவளுடன் ஒட்டியிருக்கும். தன்னையும், அதில் இருப்பவர்களையும் யார் யார் என தெரியாமல் அதையே பார்த்து கொண்டிருந்தாள்.

ஓலைக் குடிசைக்குள் காலடி வைத்து மெல்ல மெல்ல வந்த மஞ்சள் ஒளி பட்டு கண்திறந்தாள் சுபா. பத்து வருடங்களாய் தன்னை அம்மா என்று உரிமையாக அழைத்த பிஞ்சு மகள் தீபா இப்போ இப்படி ஆகிவிட்டதை பார்த்து கண்ணீர் வடித்து பேச்சு துணைக்கு யாரும் இல்லாத அவளுக்கு மெல்ல மெல்ல பேச்சு கொடுக்க தொடங்கினாள்.

'தீபா குட்டி...
தீபா குட்டி....'

தன்னுடைய பெயரையே மறந்திருந்த தீபா அடிக்கடி சுபா இப்படி தன்னை அழைப்பதை பார்த்து பழகியதில் அருகில் போய் இருந்தாள். தீபாவின் கையில் இருந்த படத்தை பார்த்த சுபா தன்னை மறந்து அழ தொடங்கி புலம்பினால். அந்த புலம்பலில் ஏதோ ஒன்று மறைந்து கிடந்தது.

'தாயே... கருமாரி உன்ன தான் நங்கள் கடவுளா பாத்தம்...
அம்மாவா நினைச்சம் நீயே எங்கள தவிக்க விட்டுட்டியே....'

என்றபடி தீபாவை அணைத்துக்கொண்டு இருந்தாள். யாரும் இல்லாத சுபாக்கு இருக்கும் கடைசி சொந்தம் எல்லாம் தீபாதான். ஆனாலும் தீபா பித்து பிடித்தவள் போல் இருப்பதும், தன்னை அம்மா என்று அழைக்காததும் ஆறுதல் படும் நொடிகளையும் சிதைத்தது. கண்ணீர் பெருக்கெடுக்க பிள்ளையை அணைத்து கொண்டு புலம்பினாள். மறக்க வேண்டும் எண்டு நினைப்பவை எல்லாம் மீண்டும் மீண்டும் செக்கு மாட்டை போல் சுற்றி சுற்றி வந்தன.. அவைகள் அவளால் மறக்க முடியாதவை என மட்டும் அவளுக்கு தெரியும். அண்ணாந்து கூரையை பார்த்தவள் கூரையின் துவாரத்தினூடு மேலே விமானங்கள் சுற்றுவது தெரிய தலையும் சுற்றியது.

அன்றும் இப்படித்தான் அதிகாலை நாலு மணியிருக்கும், கடைக்கு போன சுபாவின் கணவர் சேகர் வேகமாக வந்தான்.

'சுபா சுபா... ஆமிக்காரர் வாறாங்களாம்... ரவுனுக்க குண்டு போட்டு சனம் செத்து போச்சு... எல்லாம் தலைக்கும் மேல போட்டடி... ' என்று கத்திக்கொண்டு அறைக்குள் போனான்.

அவனை தொடந்து சுபாவும் உள்சென்று
'என்னங்க என்ன ஒரு மாரியா இருக்கீங்க...' என்றாள்

'சனம் எல்லாம் இடம் பெயருதுகள், வேளைக்கு வெளிக்கிடுங்கோ, அந்த உறுதி எல்லாம் எங்க சுபா...?? தீபாவும் அசோக்கும் எங்க போட்டாங்கள். கூப்பிடு ' என்றபடி உடமைகளை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தான். வானத்தில் பேரிரச்சலுடன் வேகமாக வந்த கிபீர் கண்மூடி முழிப்பதற்குள் நாலு குண்டுகளை போட்டு தப்பி விட்டது.

'பாத்தியே சுபா... சொன்னான் எல்லே, கொண்டு போக கூடிய எல்லாத்தையும் எடுத்து வை. அம்மா வீட்டையாவது போயிருப்பம்' என்றவும். தூரத்தில் சேகரின் தம்பி ஓடி வரவும் நேரம் சரியாக இருந்தது.

"அண்ணா அண்ணா...நான் கிணத்தடில நிண்டன், அவங்கள் குண்டு போட்டுட்டாங்கள் எங்கட வீடு சரி... உள்ள இருந்த அம்மாவையும் அப்பாவையும் காணல.. ஒரு கால் மட்டும் கிடக்குடா..."

என்று ஒரு கையில்லாமல் உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சேரனும் வந்தான்...
புலம்பும் அவனை அணைத்தான் சேரன். இருவருக்கும் ஆறுதல் கூறமுடியாமல் சுபா தவித்து தீபாவையும் அசோக்கையும் தேடி ஓடினாள். சேகர் சேரனை அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு போனான். உள்ளே போன அவனுக்கு அதிர்ச்சிகள் பல, தன்னோடு காலையில் கதைத்தோர் எல்லாம் அவயவங்கள் இன்றி அலங்கோலமாக கிடந்தார்கள். பிணக் குவியல் சந்தை போல் இருந்தது.

அங்கு வந்த உதவியாளர் 
"அண்ணை இஞ்சை சாமானுகள் இல்லை. பெரியாஸ்பத்திரிக்கு தான் அனுப்போனும் ஒராள் தான் அம்புலன்ஸ்ல போகலாம்"

என்று சொல்ல, தன் மகன் போன்ற சேரனை தடவினான் சேகர். 

"அண்ணை அழாதையணை நீ போய் அண்ணியையும் பிள்ளையளையும் எங்கயும் கூட்டிட்டு போ"
 என்ற அம்புலன்ஸ் வெளிக்கிட்டது. அங்கு இருந்து வீட்டுக்கு விரைந்தான் சேகர். அவனுக்காக காத்திருந்தனர் சுபாவும் பிள்ளைகளும். உடனடியாக சனத்தோடு சனமாக புறப்பட்டார்கள். போகும் வழியெல்லாம் பிணக்காடுகள். ஒருவளியாக கடல் கடந்து பாதுகாப்பு வலயத்தை அடைந்தார்கள். 

"இனி என்ன உயிரை கையில வைத்துக் கொண்டு வந்துட்டம்,  சாப்பாடு இல்லாம இருக்கவேண்டியது தான்"

"எல்லாம் எங்கட தலை எழுத்து..."

         என சேகர் முணுமுணுக்க உள்ளே வந்த இராணுவத்தினர் ஒரு வயது பிரிவினரை வாகனத்தில் ஏற்றி போய்விட்டார்கள். சேகரையும் தவறவிடவில்லை. சுபா எவளவோ மன்றாடினாள். அவர்கள் விடுவதாய் இல்லை. இப்போ அவள் தனித்துவிட்டாள். அன்றிரவு எல்லோரும் தனிமையில் யாரும் உறங்கவில்லை,  அடுத்தநாள் விடியும் வேளையில் மீண்டும் வந்து மிகுதி அத்தனை பேரும் ஏற்றி செல்லப்பட்டு முள்ளு கம்பிகளால் சுற்றி அடைக்கப்பட்ட இடத்தில் விடப்பட்டனர்.

"எனிமேல் ஒங்கட இடம் உதான் சரியா..? "

     என்று அதட்டலுடன் ஒரு சத்தம். சாப்பாடு வந்தது. நீண்டநாள் பசி அடங்கவில்லை எவருக்கும். சுபா தன் உணவை இரண்டாக பிரித்து கொடுத்துவிட்டு, அங்கும் இங்குமாக சேகரை தேடினாள். தங்களை போல் அவர்களையும் இங்கே விட்டிருப்பார்கள் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது.

"அம்மா எங்க போட்டு வாறிங்கள்? "
இது அசோக்கின் கேள்வி. 

"அப்பா இஞ்ச நிக்கிறாரோ எண்டு தேட போனான். ஏனடா?"

"குடும்பங்கள் பதியினமாம் எங்களோட வந்த ஆன்ரி போட்டா. நாங்களும் போவம் வாங்கோ. அக்கா அவவோட லைன்ல நிக்கிறா" என்றான். 

ஒரு நீளத்துக்கு சனம். சுபாவும் போய் நின்றாள். மணி பதினொன்று ஆகிவிட்டது. சுபாவின் முறையும் வந்தது.

"ஏ அக்கே பேர் என்ன? எத்தன பேர் நீங்க?"
 அதட்டலுடன் அந்த கேள்வி.... விடை சொல்ல சுபா முயல தீபா
"நான், அம்மா, தம்பி, அப்பா" என்றாள். 

ஏ பொண்ணு அப்பா எங்கே? என்ற 
"ஆமி மாமாக்கள் கூட்டிட்டு போட்டிடினம்" என்று அசோக் முடித்தான். அவர்களுக்கு ஒரு இலக்கம் குடுக்கப்பட்டது.

மத்தியானம் தொண்டு நிறுவனங்கள் வந்து எல்லோருக்கும் இடம் அமைத்தது. நீண்ட நாளுக்கு முன் உறங்கிய குழந்தைகள் இன்று தான் மீண்டும் நிம்மதியான உறக்கம். சுபா மட்டும் உறங்காமல் இருந்தால். இப்படி தன்னை போல் எத்தனை பெண்கள் என்று வருத்தப்பட்டவள். காலை விடியும் முதல் குளிக்க போய் விட்டாள். இதை வழக்க படுத்தி விட்டாள்.

வழமை போலும் அன்றும் அப்பிடித்தான் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு சேகர் வருவான் என்ற நம்பிக்கையில் வழமைபோல் அவனுக்கும்  சேர்த்து சமைத்துவிட்டு இருந்தாள். வேகமாக ஒரு வாகனம் வந்து அந்த முகாமுக்கு முன் நின்றது...

வாகனத்தில் இருந்து குதித்த அவர்கள் தேங்காயை போல் சில உடல்களை வெளியே தள்ளினார்கள். அடுத்த நொடி வாகனம் புறப்பட்டது. குற்றுயிராய் கிடந்த அந்த உடல்களுக்கு தண்ணி தெளிக்க போன சுபா அதிர்ந்து விட்டாள்.அவள் சமைத்தது வீணாகவில்லை,
கும்பிட்ட கடவுள் கைவிடவில்லை. சேகரின் வருகை அவளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் சந்தோசம்.

"என்னங்க... என்னங்க?" என சுபா கதற,

"சு.....பா...
                   தீ...பா... 
                                       அசோ....க்..." 

என முனகியவாறு எழுந்து நடக்க முயற்சித்த அவனை சுபா தோள் தாங்கலாய் அழைத்து கூடாரத்துக்கு கொண்டு சென்றாள். பல நாட்கள் கடக்க சேகர் பழைய நிலைக்கு வந்தான். கொடுமைகள் முகாம்களில் நடந்த வண்ணம் இருந்தன, சேகர் ஒருவாறு தன குடும்பத்தை காத்து கொண்டான். நாட்கள் நகர சுபாவும் தாயக தயாரானால். 

ஒருநாள் அதிகாலை வந்த நடேசண்ணை

" சேகர் இண்டைக்கு எங்கட இடத்துக்கு போய் பாக்கலாமாம்.
காலம ஆமி சொன்னவங்கள், விதானை நிப்பராம் போய் பதிவம். 
எங்கட இடம் மாரி வருமா? "

"உண்மையாவா அண்ணை..."

"ஓம் தம்பி எட்டு மணிக்கு போவம்.. 
இவங்களுட்டையும் பதிவு எடுக்கணும்..."

"சரி அண்ணை நான் சுபாட்ட சொல்லணும் வாறன்." எண்டு புறப்பட்டான்.

சுபாவிடம் கூறியும் அவள் அனுமதி கொடுக்கவில்லை. குழந்தை பிறக்கும் காலம் நெருங்கி விட்டது என்பதால் சேகர் அருகில் இருப்பதையே விரும்பினால். அத்துடன் ஒரு வருடம் கடந்த நிலையில் அவனை தனியாக அனுப்ப அவள் விரும்பவில்லை. ஒரு வழியாக சேகரின் மன்றாட்டத்தினால் அசோக்கையும் அழைத்து கொண்டு போவதாக முடிவானது.

"அம்மா நானும்....."

என தீபா அடம்பிடிக்க ஒருவழியாக சேகரும் அசோக்கும் புறப்பட்டார்கள். என் நேரமும் அவர்களை மட்டுமே நினைத்திருந்த சுபா மாலை வேளை வந்தும் எல்லோரும் முகாமுக்கு வந்த பின்னும் இவர்கள் இன்னமும் திரும்பாததனால் பயந்து காவலரணில் அறிவித்துவிட்டு வந்தாள். வந்து தீபாக்கு உணவை கொடுத்து விட்டு வாசலில் காத்திருந்தாள்.

பிரசவ நாட்கள் நெருங்கி விட்டதால் வலி சற்று அதிகமாவே இருந்தது. இந்த இரவில் முகாமில் தமது கூடாரத்துக்குள் இருந்து யாரும் வெளி வர அஞ்சுவார்கள். காரணம் அவளவத்துக்கு அட்டுழியம் நடக்கும். இதனால்  இருவரும் தனிமையில் இருப்பதால் ஒரு விளக்கை கொளுத்தி வைத்து விட்டு படுத்திருந்தனர்.

"டப்... டப்.... டப்ப..."

என இரு சப்பாத்து கால்களின் ஒலிகள் இந்த கூடாரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது...

காலடி சந்தத்திற்கு ஏற்ப சுபாவின் இதயம் அடிக்க தொடங்கியது. முகாம் என்றால் சத்தங்கள் சகஜம் தான், இது சற்று வித்தியாசமாகவே இருந்ததால் சுபா பயத்தால் நனைந்து கொண்டு இருந்தாள்.  சற்றும் எதிர்பாக்காமல் உள்ளே வந்த துப்பாக்கிதாரிகள்

"ஏ என்ன வெளிச்சம் தெரியுது..ஆ.."
 என வெருட்ட சற்று பயந்து 


"அவர் எனும் வரேல, தனிய நாங்க தான், அதான் பயமா இருந்த சார் " 

என்ற ஒருவன் தீபாவுடன் கதை கொடுத்துக் கொண்டு நின்றான்.. வந்த காமனின் சொந்தகாரர்களுக்கு  விருந்து உண்ண அசை வந்தது போல வயிற்றில் பிள்ளை இருந்தும் கொடுரம் கொண்டு அவளை கெடுக்க முயன்றார்கள். வெறி கொண்டு பாய்ந்தார்கள். 

"ஐயோ... அம்மா .. யாராவது வாங்க ஐயோ.. ஐயோ... யாருமே இல்லையா?"

என கதறினாள். இரவு வந்தாலே கூடாரத்தை திறக்காத சனங்கள் நள்ளிரவில் கத்தியா வருவாங்கள். எதோ வலியால் தான் அவள் கத்துகிறாள் என்று நினைத்து விட்டு எல்லோரும் படுத்து விட்டார்கள். வந்த காமுகர்களோ தங்கள் நினைத்ததை சாதித்து முடித்தார்கள். சற்றுமே வயதுக்கு வராத அந்த பிஞ்சு தீபாவையும் விட்டு வைக்கவில்லை. 

"அம்மா அம்மா அம்மா எதோ.. செய்யினம் பயமா இருக்கு.."

என கத்தினாள். வலிகளை பொறுக்குமா பிஞ்சு உடம்பு. சுபா அவர்களின் காலை பிடித்து மன்றாடினாள். கெஞ்சி அழுதாள், கதறினாள். அவர்கள் விடுவதாய் இல்லை. ஓங்கி அடித்த அடி மட்டும் வயித்தை பதம் பார்த்தது, தூக்கி வீசப்பட்ட சுபா மயங்கி விழுந்தாள். உள்ளே இருந்த உயிரும் பலி போனது..

தீபா பேய் அறைந்தவள் போல் ஆனாள். அதிர்ச்சியில் அந்த பிஞ்சு சுய நினைவெல்லாம் இழந்துவிட்டாள். அவள் வளத்த செல்ல நாயும் என்றும் இல்லாத அளவுக்கு மாறியிருந்தது. அன்று இரவு முழுவது குரைக்கவே  இல்லை. அதிகாலை எங்கும் சந்தோசமாக விடிய என்றும் போலவே  விடியாத விடியலாக இங்கு விடிந்தது.  

மயங்கி கிடந்த அவர்களை வைத்திய சாலைக்கு அனுப்பினார்கள். இவளவு  கொடுமைகளை தொடர்ந்து புரிந்த கடவுள் ஒன்றை மட்டும் நல்லதாக செய்ய திட்டமிட்டார்..அது பெரிதாக ஒன்றும் இல்லை, இந்த விடயத்தை யாருக்கும் தெரியாம மறைத்தது தான்.

"ஏய் ராசாத்தி, பாவமடி சுபா, புருஷன் இல்லாத நேரம் அவளுக்கு இப்படியா நடக்கோணும்."

"என்ன பவளம் சொல்லுறாய் சுபாக்கு என்னடி?"

" அதை ஏன்டி கேகுறாய்...? ராத்திரி அவளுக்கு பிரசவ வலி வந்திருக்கு போல. ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக ஆக்கள் இல்லை பாவம் பெட்டை.."

"ஓமடி பிள்ளை வயித்துக்க நேற்றே செத்துட்டாம். அவளுன்ற மூத்தவளும் பயந்துட்டால் போல. " என்று மரகதம் தான் பங்கை முடித்தாள்.

அந்த நாளில் ஒரு சந்தோஷ செய்தி... சுபாக்கும் அனுப்பப்பட்டது. சுபா அழுதே விட்டாள். ஒரு நாள் முன்பே வந்திருக்க கூடாத என்று...

வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த சுபாக்கு அந்த செய்தியை ராசாத்தி கொண்டுவந்தாள். 

"உன் புருசன அங்க வீட்டடில எண்ட புருஷன் கண்டவராம்..."

அவன் உயிருடன் தன இருக்கிறான் என்றதுக்கு இது அத்தாட்சி என நம்பி, எங்கு இருக்க பிடிக்காம தான் வீட இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாள்.

இப்படியே இன்னும் ஒரு ஆறு மாதம் கழிந்தது. சுபாவும் தீபாவும் தனிமையிலே இருந்தார்கள். மாலை வேளை வழமையாக கூடும் இடத்தில் எல்லோரும் கூடி கதைத்துக்கொண்டு இருந்தார்கள். அபோது ஒரு செய்தி 

"நாளைக்கு காலமை எல்லாரும் சாமானுகளை அடுக்கி நிக்கட்டாம், பஸ் வந்து ஊருக்கு கொண்டு போகுமாம்"

"என்னக்கா சொல்லுறீங்க...??, அவர் ? அங்க நிப்பார..?.." 
என்று கேள்வி கணைகளை முதலில் தொடுத்தாள் சுபா.
உறங்காமலே இரவை கழித்தாள். 

சொன்னது போலவே காலையில் பஸ் வந்தது. எல்லோரும் ஏறிக்கொண்டார்கள். சுபா ஜன்னல் கரையோரமா இருந்தாள். தான் வாழ்ந்த சொர்க்கத்தை பாக்கும் ஆவல் மட்டும் இன்றி தான் கணவன் எங்கயாவது இருக்கிறானா என்று தேடுவதற்கும் தான். 

"ஏ உங்க இடம் வந்துடு எறங்குங்க..." 

என்ற வார்த்தை நிஜ உலகுக்கு கொண்டு வந்தது. இறங்கி தேடினாள். எங்கும் இல்லை. எல்லா இடமும் நிசப்த அலைவரிசை, சொந்த காணிகளில் கூடாரம் அமைக்க தொண்டு நிறுவனங்கள் தமது உதவிகளை புரிந்தது. அங்கும் தனிமையில் தான், தமது வீட்டை பார்க்க போன அசோக்கும் சேகரும் அங்கும் இல்லை, தனிமைதான் மிச்சம். இரண்டு நாளா வீட்டுக்குளே கிடந்தாள். 

"சுபாக்கா..... சுபாக்கா...." என்று யோகம் கூப்பிடும் சத்தம் கேட்டு அந்த நினைவில் இருந்து மீண்டாள்.

"என்னக்கா எங்க குண்டு போட்டதாம்...?" 

"என்ன சுபா என்ன நடந்த.. ஏன் அழுதனி..."

"காலமை பிளேன் வந்த எல்லே..." என்று தடு மாறினாள். தான் இவளவு நேரமும் நினைவில் இருந்ததை மறந்து விட்டாள். ஆனால் யோகம் புரிந்து கொண்டாள். 

யோகம் தன்னுடன் சாப்பிட கூட்டி சென்றாள்
அங்கு வந்த யோகத்தின் கணவர் 

" யோகம் கொயிலடில தென்னம் பிள்ளை குடுக்கினமாம் வா போக.. சுபா நீயும் வாவன்" என்றான்..

அவர்கள் மூவருடன் தீபாவும் நால்வராக சென்றனர். அங்கு ஆளுக்கு ஒரு தென்னம் பிள்ளை கொடுப்பதாக ஒரு பேச்சு. யோகம் வங்க போய் வர அவளை தொடர்ந்து சுபாவும் போனாள்.  அவளுக்கும் ஒரு கன்று வழங்கப்பட்டது.

தீபா இரு கையையும் நீட்ட அந்த பிஞ்சுக்கு இரண்டு கொடுத்தார்கள்.

திரும்பி நால்வருமாக வரும் போது அவளது மகன் அசோக்கின் சப்பாத்தை கண்டு அதிர்ந்து விட்டாள்.
அது விட்டு சென்றதாக இருக்கும் என்று மனசை தேற்றி விட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் இருவரும் வராத போதும் வருவார்கள் என்று காத்து கிடந்தாள். வீட்டுக்கு வந்து தென்னையை நடுவதற்கு ஆயத்தம் ஆனாள்.

"தீபா தீபா ..... இஞ்சவா ..???"

"உன்ர கையால நடுமா.... "
என்று அழைத்துக் கொண்டு கிடங்கு வெட்ட மண்வெட்டி எடுத்து வந்தாள். நாலு வெட்டு வேட்டுவதற்குள் உள்ளே இருந்து அவள் கொடுத்து விட்ட சாப்பாட்டு பெட்டி வந்தது. ஒவ்வொன்றாக வந்த எச்சங்கள் பாத்து அதிர்ந்தாள். உள்ளே சேகரும் அசோக்கும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி எலும்புக்கூடாக கிடந்தார்கள்.

அதை பாத்த அடுத்த நொடி சுபா வும் அதிர்ச்சியால்  இறந்து விட்டாள். இவளவும் என்ன என்று தெரியாமல் தீபா மட்டும் தன்னம் தனியாக தென்னையுடன் நின்றாள்..... அந்த தென்னம் பிள்ளையின் சிறிய ஓலை கேள்விக்குறி போல் வளைந்து நின்றது... தீபாவுக்காக...

முற்றும்....
தமிழ்நிலா


உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

3 comments:

நம்பள்கி said...

நல்ல கதையுடன் கூடிய கருத்துக்கள்.
என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!
நன்றி!

Anonymous said...

வணக்கம்
மனதை கவர்ந்த சிறுகதை அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Sanjay Thamilnila said...

நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...