என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

புதுத் தென்றல் போர்ப் பாதையில் புதையுண்டாள்..



மண்ணின் அடியில் ஒரு கீச்சுக்குரல்,
பையிலிருந்த பொம்மை — கதறியது.

உருக்குலைந்த எலும்புகளோடு
மௌன சாட்சியாக புதையுண்டிருந்தது
அந்தப் பொம்மை.

பொம்மையின் மொழி முடங்கிய போதும்,
நீள் உறக்கம் குளம்பிய விழிகளில்
நிழல்கள் மட்டும் பேசுகின்றன.
அதுவும் பார்த்திருக்கக்கூடாது அந்த பயத்தை.

பள்ளிக்குச் சென்ற அவள் புத்தகப்பை
குருதிக் கதைகள் வாசித்தது,
சப்பாத்துக்கள் சுடுகாட்டின் பாதை
எப்படி சென்றன எனச் சொல்லியது
அந்தக் கதை.

கடைசி சிரிப்பு அந்த மண்ணோடு கலந்திருந்தது
மண்ணின் மணத்தில் குழைந்திருந்தது
அவள் வாசித்த இறுதிக் கவிதை ஒன்று.
இப்போதெல்லாம் ஒரே புனித மௌனம்.

மௌனமாகப் பேசும் என்புகளிலிருந்து
“நான் கற்பழிக்கப்பட்டேனா?” என்ற கேள்வி,
பூமி பிளந்து விண்ணில் உறைந்தது —
பதில் எதுவுமின்றி…

மரணத்தின் மேல் விழித்தபோது 
பொம்மை மட்டும் சத்தமிட்டது.
பொம்மையின் விழிகளில் உறைந்திருந்தது
ஒரு கடைசி கண்ணீர்.

தோண்டப்பட்ட இடமொன்றில்
தொலைந்த காலத்தின் அழுகிய நிழல்கள்.
அவளின் பெயர் இன்றும் தெரியவில்லை,
ஆனால் அவள் பொம்மையின் குரல்

நம் இரவில் என்றும் கீச்சும் அந்தக் குரல்..

ச. 01.07.2025 | 11.47pm

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

என் அறை.... என்நாளும் எனக்கானது...


என் அறையினை நான் மிகவும் நேசிக்கிறேன்..
நான்கு சுவர்களுடன்,
ஒரே ஜன்னல்... ஒரே வழி...
எல்லாவற்றையும் போல் தான்..
இருப்பினும் எனக்கானது..

சொர்கமாகும்.. நரகமாகும்....
இங்கே சமத்துவம் கற்க முயல்கிறேன்.
என்நாளும் நியாயமானது....
என்னை நானே உணர முயல்கிறேன்..
கனவுகளின் காட்சிக்கூடம்....
எனக்கானவற்றை தேட முயல்கிறேன்..

உள்ளே நுழைந்ததும் கழற்றி
சுவரில் தொங்கவிட்ட முகமூடிகள் ஏராளம்..
இனி நானாகிவிடலாம்... என் சுயம் விழிக்கத்தயார்...
இதோ நானாகியிருக்கிறேன்...

முதலில் உதடுகள் புன்னகைக்கையிலும்,
சுழலில் சிக்கும் நினனைவின் தடம்..
முடிவில் நாத்தீகனாக உறங்குகையிலும்,
எதிரில் முழிக்கும் கடவுளின்படம்..

இது பின்னிரவுகளின் பாடல்..
ஏங்கும் இரவுகளுடன் தூங்கும் தனிமைகள்
எனக்கானவையே...
அர்த்தமுள்ள இரவுகளை பிரசவிக்கும்
சில நேரங்களில்..

இது ..

இருவர் மட்டும் வாழும் இருண்ட உலகம்.
நான்..
என்கூடவே.. தனிமை..
என் அறையினை நான் மிகவும் நேசிக்கிறேன்..
இது எனக்கானது...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

மீளுதல் பற்றி..

வாழும் போதே மரித்திட்ட
சிலரில் ஒருவன் நான்...
சில நொடிகளில்,
நீளும் நிமிடங்களில்...
அத்தனை கால அளவுகளிலும்...
இன்னும் எல்லாவற்றிலும்...

உயிர் இழத்தலை விட
உணர்விழத்தலே மரணம்...
சில பார்வைகளில்...
சிலவற்றை பார்க்கையில்...
சில கேள்விகளில்..
சிலவற்றை கேட்கையில்..
இன்னும் இவைகள் ஒருங்கிணைகையிலும்...

இப்போதெல்லாம் மீளுதல் பற்றி
ஒரு எண்ணம்...
எதிலிருந்தேனும்... இப்போதே...
இருப்பினும் அதிகமாய் இழக்கப்பட்டிருந்து...
இனி இழந்தவற்றை மீட்டல் பற்றியும்
இருக்கலாம்...
எப்படியாயினும் இதிலிருந்து
மீளுதல் பற்றியே எண்ணம்....

#தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Aazhi (ஆழி) Short film (with english subtitles)


France Bollywood Couture, கங்கைவேணி கைலைவாசன்  அவர்களின் தயாரிப்பில், பிரியனின்  இசையில், பானுவின்  ஒளிப்பதிவு /படத்தொகுப்பிலும், துசியந்தன், கிருசாலினி, விமல்ராஜ், ரமேஷ் மற்றும் பேபி கிருசாலினியின் நடிப்பிலும்,
எனது திரைக்கதை, வசனத்தில் உருவான அழகிய குறும்படம், இதில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். கதை மற்றும் இயக்கம் S .A .நிலான். 


எங்கள் படைப்பிற்கு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.


தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

அழைப்பு - சிறுகதை


அன்று ஞாயிற்றுக் கிழமை காலை, எல்லா நாட்களைப் போலவுமே அந்த விடியலும். ஏதோ ஒன்றைப்  பறிகொடுத்தவன் போல கட்டில் சட்டத்தில் தலைவைத்து, மேலே சுற்றிக்கொண்டிருக்கும் காற்றாடியைப் பார்த்துக் கொண்டிருந்தான் தீபன். வழமை போல தனது வேலைகளை சமையல் அறையில் தொடங்கியிருந்தாள் ரம்யா.

" இந்தாங்கோ இதை குடிச்சுட்டு எழும்புங்கோ.."  என்றவாறு கட்டிலின் அருகில் இருந்த மேசைமீது தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு திரும்பினாள்.  தீபன், ரம்யாவின் கைகளை பற்றி

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

தினப்பயணங்கள்...


ஒவ்வொரு பேருந்துப் பயணமும்
ஏதோ ஒன்றைச்
சொல்லியே செல்லும் எனக்கு..
காத்திருப்புக்களின் முடிவில்
மிதிபலகையில் நடத்துனரின்
அதட்டலுடன்ஆரம்பமாகின்றன
என் பயணங்கள்....

கண்கள் இருக்கையை
தேடி அலைதலும்...
கால்கடுக்க நிற்றலும்..
பழக்கமானவையே
ஒவ்வொரு பயணிக்கும்....
இருக்கையில் இருந்து
ஆரம்பிக்கிறது இழப்புக்கள்...

மீதிகளை எண்ணியவாறே
தனிமனித பொருளாதாரம்...
காற்றுக்களை தேடியவாறே
ஒரு மனிதனின் மனதோரம்...
நிம்மதியை தொலைத்தவர்களின்
ஒரு மணிநேர தூக்கம்...

அலப்பறைகள்.. தொகுப்புரைகள்..
அறிவிப்புகள்..தெரிவிப்புக்கள்...
வண்டியின் ஒலிப்பேழையை
மீறி ஒலிக்கும்.... இருப்பினும்...
வண்டியின் அலாரங்கள்
தூக்கத்தை தொலைத்துவிடுகிறது...

என் பயணங்கள் தூரமானவை..
துயரமானவையும் கூட..
இருப்பினும் இப்போதெல்லாம்..
எம் மனிதாபிமானம் பற்றியே
சொல்லும் என் தினப்பயணங்கள்...

தமிழ்நிலா
உதயன் 2014 june

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

பிம்பம் உடைத்தல்...


என்னில் நிறைந்துள்ள
கடதாசிப்பூக்கள்
உன் வார்த்தைகளின்
விசிறல்களில் மலர்ந்தவை..
இருப்பினும்
இன்னமும் இருக்கிறது...

கசப்புகள் படைத்த
ஒரு படையலை
உண்டபதற்காய்
ஒரு குவளை விடம்
நிறைத்துவைத்துள்ளேன்....
இது முடியும் நேரம்

கடவுள் இன்றியும் இருக்கலாம்...
உள்ளே...
திரை அவிழ்கிறது
தீர்மானம் சிரிக்கிறது
சில சிதறிய நரக துளிகள்
வெளியே...

உன் விசையின் விகாரங்கள்
விலகியிருந்தது..
ஒரு கண்ணாடி முகம்
இரண்டாய் உடைந்திருந்தது...

நீயும் நானுமாய்...
நடுவில் நட்பு...

தமிழ்நிலா
உதயன் 29.06.2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

சிலநேரம் தீ..??


சிதறி ஓடிக்கொண்டிருக்கும்
சிலம்பின் பரல்களை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்..
தீயினை அணைக்க
இது போதாது தான்...
தீ படர்ந்தாகிட்டு..மேலுமாய்...

சேவகர்கள் இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்
ராணியின் சிலம்பையும்
கோவலன் உயிரையும்...
எதுவும் கிடைத்தபாடில்லை...

இருப்பினும் மாதவிகள்
தீயிலும் வேகமாக
பரவி விட்டார்கள்...
கற்பின் வீரியம் குறைந்தாகிட்டு...
சிலநேரம் தீ அணையலாம்..

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

என் கனவுகள்


நாளொரு கனவின் முடிதலுடன்
ஆரம்பமாகிறது
ஒவ்வொரு காலையும்...

கனவுகள்,
உள்மன வெளிப்பாடுகள்..
கனவுகள்,
ஆழ்மன படிமங்கள்...
என் கனவுகள்
இழந்தவை பற்றி...
இல்லாதவை பற்றி...
இன்னும் சில பற்றி...

நான் ஒரு விளம்பர பட
இயக்குனர்...
கற்பனைகளை கனவாக்குவேன்..
நான் ஒரு மாய ஜால
மந்திரவாதி..
இல்லாதவற்றை உருவாக்குவேன்..

விதம்விதமாய் இருக்கும்,
என் எல்லாக் கனவுகளும்...
விடியும் வரை நீளும்..

அதிகாலை கனவுகள்
பலிக்காது.. என்னும் அம்மாவின்
சத்தத்துடன்
ஆரம்பமாகிறது
ஒவ்வொரு காலையும்...

இன்றும் நான் ஒன்றாக
கனாக்கண்டேன்...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

இன்னும் ஏதோ ஒன்று..



உழைப்பின் வாசம்..
நினைவுகளின் பிசுபிசுப்பு..
அன்பின் பரிதவிப்புக்கள் மீதமிருக்க
அத்தனையும் சூனியமாய்..- கூடவே..
அடையாளம் ஏதுமற்ற நான்,
அடையாளம் கண்ட நீ..

இடைவெளி நெருங்காத
குறும் பயணத்தின்
நீண்ட நேரத்தின் கடை நொடி அது..
நீ, நான் இன்னும் ஏதோ ஒன்று..
எதிரில்  நிறுத்தம்...
மீண்டும் பழகிய ஒன்று..
இருப்பினும் நின்று போன அதே
தரிப்பிடத்திலிருந்து
நீண்டு கொண்டது எம் பயணங்கள்...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...